பெட்டாலிங் ஜெய, ஜனவரி.02-
இரமலான் சந்தை வியாபாரிகளிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு இடங்களை ஒதுக்கும் இடைத்தரகர் அல்லது முகவர்களின் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகவர்களாலும் இடைத்தரகர்களாலும் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க, பெட்டாலிங் ஜெயா நகராட்சியின் முறையைப் பின்பற்றி நாடு முழுவதும் இரமலான் சந்தை இட ஒதுக்கீட்டை இயங்கலை மூலமாக வெளிப்படையாக நடத்த வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
எளிய மக்கள் வருமானம் ஈட்டும் இந்த வாய்ப்பில் முறைகேடுகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர், இரமலான் சந்தைப் பகுதிகளில் முறையான குடிநீர் வசதியும் தூய்மையை உறுதிச் செய்யுமாறும் அந்தந்த மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டார். இரமலான் சந்தைப் பகுதிகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாதவர்கள் அல்லது அசுத்தம் செய்பவர்கள் மீது பாகுபாடின்றி அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








