நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசாரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்திடம் ஒப்படைப்பதாக மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அம்னோவின் 80-வது ஆண்டு மாநாட்டில் பேசிய ஜலாலுடின், மந்திரி பெசார் நியமனம் என்பது தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றார். தற்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் மீதான நம்பிக்கையை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே மீட்டுக் கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தெளிவான வழிகாட்டல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார மரபு சார்ந்த விவகாரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இந்த முடிவுக்குக் காரணம் என்றும், இது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். ஒருவேளை தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்த பொதுத்தேர்தல் வரை எதிர்க்கட்சியாகச் செயல்படவும் தாங்கள் தயார் என ஜலாலுடின் அலியாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்."








