கோலாலம்பூர், ஜாலான் அம்பாங், கிரேட் ஈஸ்டர்ன் டவர் அருகே அம்பாங் பாயிண்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓர் இந்திய தம்பதியினர் விபத்தில் பலியான வழக்கில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் ஒருவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 24 வயதான டேனிஷ் ராமன் குமார் குமரேசன் என்ற அந்த மாணவர், தனது வழக்கறிஞர் மூலம் இந்த மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
ஒரு சாலை விபத்து வழக்கில் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்த அரசுத் தரப்பு எடுத்த முடிவு, உள்நோக்கம் கொண்டது என்று அவர் தனது மனுவில் வாதிட்டுள்ளார். கொலை செய்யும் நோக்கம் இல்லாத ஒரு சாலை விபத்தில் இப்பிரிவைப் பயன்படுத்துவது பகுத்தறிவற்றது என்றும், நாடாளுமன்றத்தின் நோக்கத்திற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆபத்தான அல்லது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் மரணங்களுக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் மட்டுமே பிரத்யேகமாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இத்தகைய விபத்துகளில் கொலைக் குற்றச்சாட்டைப் பயன்படுத்துவது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது என்றும், எனவே அரசுத் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 61 வயது ஏ. துரைசிங்கம் மற்றும் அவரின் 56 வயது துணைவியார் ஏ. மேனகா ஆகியோர் உயிரிழந்தனர்.








