கோலாலம்பூர், டிசம்பர்.20-
2025-ஆம் ஆண்டு முழுவதும் மலேசியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்துவதில் 'மடானி' அரசாங்கம் மிகத் தீவிரமாகச் செயல்பட்டதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பண உதவித் திட்டங்களை உயர்த்தி வழங்கியதன் மூலம் இது சாத்தியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மடானி அரசாங்கம், குடும்பங்களுக்கான ஆதரவை விரிவுப்படுத்தியுள்ளது என்றும் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் விரைவாக நிவாரண நடவடிக்கைகளும், தேவையான உடனடி உதவியும் வழங்குவதை உறுதிச் செய்து இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
2025-ஆம் ஆண்டில் எஸ்டிஆர் எனப்படும் ரஹ்மா பண உதவி மற்றும் சாரா எனப்படும் ரஹ்மா அடிப்படைத் தேவைகள் உதவி ஆகிய திட்டங்களுக்காக மட்டும் அரசு 13 பில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
2025 இல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் தலா 100 ரிங்கிட் ஒருமுறை வழங்கும் One-off உதவித் திட்டத்தையும் அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தியதாக பிரதமர் விளக்கினார்.
எந்தவொரு குடும்பமும் அல்லது தனிநபரும் சமூகப் பாதுகாப்பு வலையிலிருந்து விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று இன்று சனிக்கிழமை தமது முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








