கெடா மாநிலம் கோலா மூடா பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் 62 கிலோ கிராம் ஷாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது கோலா மூடா போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர் திருசெல்வன் ஹேசக்கி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நடவடிக்கையில் 47 வயதுடைய ஒரு இந்தோனேசிய ஆடவர் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா தெரிவித்தார்.
முதலில் கம்போங் பெர்மாத்தாங் ரெங்கான் சாலையோரத்தில் சந்தேக நபரைத் தடுத்து சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து 150 கிராம் ஷாபு கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அருகிலிருந்த தங்கும் விடுதியில் மேற்கொண்ட சோதனையில் மேலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 3.145 மில்லியன் ரிங்கிட் என்று போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட நபர் மீது அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952, பிரிவு 39B கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வரும் மார்ச் 17-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.











