Mar 29, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 10 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 10 ஆண்டு சிறை

Share:

சிரம்பான், மே.26-

தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்ற குற்றத்திற்காக முன்னாள் பல்லைக்கழக விரிவுரையாளரும், கடந்த 2018 ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவருமான பெண்மணி ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கல்வித்துறையிலும், பல்கலைக்கழக நிர்வகிப்பிலும் பல்வேறு சிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு இருப்பவரான 58 வயது லாவ் செக் யான் என்ற அந்தப் பெண்மணி, மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

எனினும் அவருக்கு எதிரானக் கொலை குற்றச்சாட்டு, நோக்கமில்லா கொலைக் குற்றச்சாட்டாக 304 பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. அக்குற்றச்சாட்டை அந்த முன்னாள் விரிவுரையாளர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதி ரொஹானி இஸ்மாயில் விதித்தார்.

முன்னதாக, அந்தப் பெண்மணிக்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யக் கோரி, சட்டத்துறை அலுவலகத்தில் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் கிட்சன் பூஃங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் சிரம்பான், ராசா கெமாயான் - கோல்ப் அண்ட் கண்ட்ரி டவுன்ஷிப் அருகில் உள்ள தனது வீட்டில் தனது கணவர் போ செங் ஹியாப் என்பவரை நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திக் கொன்றதாக அந்த முன்னாள் விரிவுரையாளர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்துப் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில் இந்தப் பெண்மணியும் ஒருவர் ஆவார்.

இரண்டு வார காலம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த பெண்மணியின் அருகில் இருந்தவாறு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டவர் அவரின் கணவர் போ செங் ஹியாப் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related News