சரவாக்கின் செரியான் பகுதியில் காற்று மாசு குறியீடு 200-ஐத் தாண்டியதைத் தொடர்ந்து, 108 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தேசிய காற்று மாசு நடவடிக்கைத் திட்டத்தின்படி, காற்று மாசு குறியீடு 200-ஐத் தாண்டி மிகவும் மோசமான நிலையை எட்டும்போது பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சரவாக் துணை முதலமைச்சர் டத்தோ டக்ளஸ் உஃகஹ் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்படும் காலத்தில் வீட்டிலிருந்தே கற்றல் மற்றும் கற்பித்தல் முறை செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மாலை 4 மணிக்கு தேபெடு- வில் 212, செரியானில் 202 என்ற அளவில் காற்று மாசு பதிவானது. பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் இதயம், சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மாசடைந்த காற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.








