கெடா குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ‘ஆப்ஸ் மாஹிர்’ மற்றும் ‘ஆப்ஸ் சாபு’ சோதனை நடவடிக்கைகளில் 94 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கோலா மூடா, குபாங் பாசு, லங்காவி உள்ளிட்ட பகுதிகளில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 227 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், 41 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
கைது செய்யப்பட்டவர்களில் 84 ஆண்கள், 10 பெண்கள் அடங்குவர். அவர்களில் 45 பேர் வங்காளதேசப் பிரஜைகள், 26 பேர் மியான்மர் நாட்டினர், 18 பேர் இந்தோனேசியர்கள் மற்றும் 5 பேர் பாகிஸ்தானியர்கள். கட்டுமானத் தளங்கள், தொழிலாளர் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. 18 முதல் 59 வயதுடைய இவர்களிடம் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 








