பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா–புருணை இடையிலான 27ஆவது ஆண்டு தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்காக அடுத்த வாரம் பண்டார் ஸ்ரீ பெகாவானில், புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா- யாவைச் சந்திக்கவுள்ளார். சுல்தான் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், தமக்காகப் பிரார்த்தனை செய்ததாக அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியா மற்றும் புருணை இடையிலான உயர்மட்ட இருதரப்பு ஆலோசனை அமைப்பாக இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதுடன், பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாட உள்ளனர். இதனிடையே, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட குடலிறக்கத்திற்காக அன்வாருக்கு நேற்று முன்தினம் சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








