மலேசியாவில் மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த 33 வயது சிங்கப்பூர் ஆடவர், அவருக்கு நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய உதவிய கடத்தல்காரர்களாலேயே கடத்தப்பட்டுள்ளார்.
ஜோகூர் பாருவில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த ஆடவரையும், அவரது 28 வயது சிங்கப்பூர் காதலியையும் போலீசார் மீட்டதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட ஆறு உள்ளூர் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். கடத்தல்காரர்கள், அந்த ஆடவரின் தாயாரிடம் 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் பிணைத்தொகையாகக் கேட்டதுடன், அவரைத் தாக்கி காயப்படுத்தியதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பேரங்காடியில் பிணைத்தொகை கைமாற்றம் நடைபெறும்போது போலீசார் அதிரடியாகச் செயல்பட்டு இருவரையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 லட்சத்து 64 ஆயிரத்து 440 ரிங்கிட் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள், 10 கைத்தொலைபேசிகள், ரொக்கம், ரோலக்ஸ் கடிகாரம், சங்கிலி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆறு சந்தேக நபர்களும் கடத்தல் தொடர்பான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர். நால்வர் போதைப்பொருள் பரிசோதனையில் நேர்மறையாக இருந்ததுடன், மீட்கப்பட்ட இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.








