நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையிலும், அங்கு மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவாக இருப்பதாக மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு அதிகம் இல்லை என்றாலும் கூட, இறுதி முடிவு நெகிரி செம்பிலான் மாநில யாங் டி பெர்துவான் பெசார் துங்கு முக்ரிஸ் துங்கு முனாவீர் மற்றும் மாநில சட்டமன்றத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் மாநில அரசியல் தொடர்பான எந்த ஒரு முன்னேற்றமும் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் மற்றும் கூட்டரசு மட்டத்தில் பாரிசான் – பக்காத்தான் உறவுகள் குறித்து அன்வாரை விரைவில் சந்திக்க உள்ளதாக பாரிசான் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியும் அறிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான சமஸ்தானபதியை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாக நேற்று அம்மாநில அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள், நடப்பு மந்திரி பெசார் அமினுடின் ஹருனுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்தது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








