மலாக்கா, பிப்ரவரி.25-
பத்தாண்டுகளுக்கு முன்பு வேலையற்ற ஒரு நபரின் மரணத்திற்கு உள்நோக்கமின்றி காரணமானதை ஒப்புக் கொண்ட 40 வயது மாட்டு வியாபாரி ஒருவருக்கு மலாக்கா ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
எம். மகேசுவரன் என்ற அந்த மாட்டு வியாபாரிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த நபர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ரொஹாதூல் அக்மார் அப்துல்லா சிறைத் தண்டனையை விதித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மே 22 இரவு 10.30 மணி முதல் மே 23 காலை 9.50 மணி வரையிலான காலக் கட்டத்தில், மலாக்கா ஜாசின், செலாண்டார் பகுதியில் உள்ள ஜூஸ் அணைக்கட்டுக்கு அருகிலுள்ள செம்பனைத் தோட்டப் பகுதியில், 35 வயது எஸ். மணிகுமார் என்பவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய உடல் காயத்தை ஏற்படுத்தியதாக மகேசுவரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கொலைக்கு நிகராகாத மரணத்தை விளைவித்ததற்காக குற்றவியல் சட்டம் 304 ஆவது பிரிவின் கீழ் மகேசுவரன் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.








