கோலாலம்பூர், நவம்பர்.21-
அதிக விஷயமுள்ள பாக்ஸ் வகை ஜெல்லி மீன் கடித்தால், உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவுகள் குறித்து கடல்சார் நச்சுயியல் துறை நிபுணரான டாக்டர் முகமட் நாயிம் அப்துல் ரஸாக் விழிப்புணர்வுத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
லங்காவியில் ரஷ்ய தம்பதியின் 2 வயது மகன் ஜெல்லி மீன் கடித்து உயிரிழந்ததையடுத்து, தற்போது பாக்ஸ் வகை ஜெல்லி மீன் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன.
அந்த வகையில், ஜெல்லி மீன் கடித்தது உறுதியானால், முதலில் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் முகமட் நாயிம்.
பெரும்பாலும், ஜெல்லி மீன்கள் கடித்ததே பலருக்குத் தெரியாது என்று எச்சரிக்கும் அவர், கடித்த இடத்தில் உள்ள கொடுக்குகளை வைத்து அதனை அடையாளம் காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கடித்த இடத்தில் முதலில், வினெகரை ஊற்றி கழுவி, 30 வினாடிகளுக்குப் பிறகு, அதிலிருக்கும் கொடுக்குகளை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Lidocaine போன்ற மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கையிருப்பில் இவை எதுவும் இல்லையென்றால், கடல் நீரைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த முதலுதவியை அடுத்து, பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








