இன்று வெள்ளிக்கிழமை காலை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய யாங் டி-பெர்துவான் பெசார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருந்த விழா நடைபெறும் துங்கு பெசார் தம்பின் துங்கு சையத் ரஸ்மான் துங்கு சையத் இத்ருஸ் அல்-காத்ரியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் யாரும் நுழையக்கூடாது என போலீசார் தடைவிதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்வின் போது, ஜெலுபு உண்டா டத்தோ மாருஃப் மாட் ரஷாத், ஜோஹோல் உண்டா டத்தோ முஹம்மது அப்துல்லா, ரெம்பாவ் உண்டா டத்தோ ராஜா அப்துல் ரஹீம் யாசின் மற்றும் டத்தோ ஷாபந்தார் சுங்கை உஜோங் டத்தோ ஸ்ரீ உத்தாமா பதருதீன் அப்துல் காலித் ஆகியோரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
போலீசார் பிரதான நுழைவாயிலை பூட்டியதால், அவர்கள் பயணித்த வாகனங்களும் தடுக்கப்பட்டன.
இதனால் அதிருப்தியடைந்த டத்தோ முஹம்மது அப்துல்லா, உடனடியாக கதவைத் திறக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
என்றாலும், யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருதீன் சாரிமன் விளக்கமளித்ததையடுத்து, அங்கு பதற்றமான சூழல் உருவானது.
இந்நிலையில், சில நிமிடங்களுக்குப் பிறகு, மூன்று உண்டாங் தலைவர்களும் டத்தோ ஷாபந்தார் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் புதிய யாங் டி-பெர்துவான் பெசார் அறிவிப்பு விழாவைச் சுற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








