ஜோகூர் மாநிலம் குளுவாங்கில் ஐந்து பேரின் உயிரிழப்பிற்கும், எட்டு பேர் காயமடைந்ததற்கும் காரணமான கோர விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞருக்கு மேலும் நான்கு நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரான அந்த இளைஞரை, விசாரணைகளுக்கு உதவும் வகையில் மேலும் நான்கு நாட்களுக்குக் காவலில் வைத்து விசாரணை செய்ய குளுவாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முஜிப் சரோஜி இன்று உத்தரவிட்டுள்ளார்.
முதலில் இந்த வழக்கானது, சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 42(1)-இன் கீழ் கவனக்குறைவாக மற்றும் ஆபத்தான வகையில் வாகன ஓட்டிய குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டது.
என்றாலும், அதன் பின்னர் சட்டத்துறை தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில், இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றமாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவமானது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








