எதிர்வரும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில், தற்போது தங்களிடம் உள்ள அனைத்து தொகுதிகளையும் தக்க வைக்க ஜசெக அனைத்திலும் போட்டியிடும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜோகூரில் கூடுதலான சில தொகுதிகளிலும் போட்டியிட ஜசெக விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவானது நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஜசெக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகஅந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முடிவானது, இவ்வார இறுதிக்குள் பகாதான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாநிலத் தேர்தல்களில் ஜசெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில் அந்தோனி லோக், ஜசெக தலைவர் கோவிந்த் சிங் தியோ, துணைத் தலைவர் ஙா கோர் மிங், ஜசெக மகளிர் பிரிவுத் தலைவர் தியோ நி சிங் மற்றும் சரவாக் மாநில ஜசெக தலைவர் சொங் சியெங் ஜென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.








