ஸ்கூடாய், பிப்ரவரி.11-
ஜோகூர், ஸ்கூடாய் , தாமான் டாமாய் ஜெயாவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாதக் கர்ப்பிணி மற்றும் அவரது நண்பர் என இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர், வீட்டின் உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டார் உட்பட ஐந்து நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 45 விழுக்காடு தீக்காயங்களால் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ள போலீசார், இதில் ஏதேனும் குற்றச் செயல்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு இணைந்து செயல்பட்டு வருகின்றன. சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் கணவர் வேலையில் இருந்ததால் உயிர் தப்பிய நிலையில், அவர்களுடன் தங்கியிருந்த 22 வயது நண்பரும் இவ்விபத்தில் சிக்கிக் பலியானார்.








