கோலாலம்பூர், நவ. 13-
தனது தாயாரை கொலை செய்து மூன்று ஆண்டு காலமாக ஐஸ் பெட்டிக்குள் வைத்திருந்ததாக நம்பப்படும் 53 வயதுடைய நபர், இக்கொலை சம்பவத்தில் ஈடுபடுவதற்கு தனிப்பட்ட பிரச்னைகள் இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வந்த போதிலும், கொலை செய்யப்பட்ட மூதாட்டி, உண்மையிலேயே கைது செய்யப்பட்ட நபரின் தாயாரா? என்பதற்கான கோணத்தையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் தனது தாயார்தான் என்று அந்நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் இதனை உறுதிப்படுத்துதற்கு கைரேகை சோதனை மற்றும் மரபணு சோதனை முதலியவற்றுக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, ஓ.யு.ஜி. கார்டனில் ஒரு வீட்டில் ஐஸ் பெட்டியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட 80 வயது மூதாட்டியின் சடலத்தை போலீசார் நேற்று காலையில் மீட்டது தொடர்பில் கருத்துக்கையில் டத்தோ ருஸ்டி மேற்கண்டவாறு கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர், மனநல சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.








