சிங்கப்பூர், மே.31-
மலேசியாவுக்கான கடற்படைத் தாக்குதல் ஏவுகணை அமைப்பிற்கான ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், உலகின் முக்கிய சக்திகள் கடைப்பிடித்து வரும் “கண்டுகொள்ளாத மௌனம்” கவலைக்கிடமானது என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிங்கப்பூரில் நடைபெற்றும் வரும் Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், சர்வதேச ஒப்பந்தங்களின் நம்பகத்தன்மைக்கு இந்த செயலானது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவிற்கான ஏவுகணை கொள்முதலில், சில தொழில்நுட்பங்களுக்கான ஏற்றுமதி அனுமதிகளை நார்வே அரசாங்கம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த நடவடிக்கையானது மலேசியாவை குறிவைத்து எடுக்கப்படவில்லை என்று நார்வே அரசாங்கம் விளக்கம் அளித்திருந்தாலும் கூட, ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள Kongsberg நிறுவனத்திடம் இருந்து 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீட்டை மலேசியா கோரி வருகின்றது.
இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மௌனம் காத்து வருவது, சில நாடுகள் அனைத்துலகச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற ஆபத்தான எண்ணத்தை உருவாக்குவதாகவும் அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.








