ஜார்ஜ் டவுன், மே.31-
பினாங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் சினிமா கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
முஹமட் போஷி சாபி உல்லா என அடையாளம் காணப்பட்டுள்ள 50 வயதான அந்நபரின் சடலத்தை நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் கண்டறிந்தனர்.
தற்போது மிட்நைட் பிளேக் பொழுதுபோக்கு மையமாகச் செயல்பட்டு வரும் அந்த இருமாடிக் கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இவ்விபத்து ஏற்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு இயக்குநர் முஹமட் ஷோகி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 10.28 மணியளவில் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அக்கட்டிடமானது 70 விழுக்காடு தீயில் எரிந்தது குறிப்பிடத்தக்கது.








