கோலாலம்பூர், மே.31-
புத்ராஜெயாவிலுள்ள அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வரும் ஜூன் 3 மற்றும் ஜூன் 5 -ஆம் தேதிகளில் கேட்கக்கூடிய பீரங்கி முழக்கங்களால் அச்சமடைய வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு, அரச மரியாதை செலுத்தும் விதமாக நடைபெறும் "Trooping of the Colours Parade" எனப்படும் கொடி வண்ண அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, மலேசிய ஆயுதப் படையினர் சடங்கு முறையிலான பீரங்கி வணக்கத்தைச் செலுத்த உள்ளனர்.
இது குறித்து புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹமட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜூன் 3-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் முழு ஒத்திகையின் போது, இரண்டு பீரங்கி குண்டுகள் வெடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் போது 21 பீரங்கி குண்டுகள் ஒரே நேரத்தில் முழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு புத்ராஜெயா Presint 1 -இல் அமைந்துள்ள Dataran Pahlawan Negara-வில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








