அம்பாங்- ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத் தடம் புரண்ட எல்ஆர்டி ரயில் விபத்து தொடர்பாக, பிரசரானா மலேசியா நிறுவனத்திற்குச் சட்டப்படி சாத்தியமான அதிகபட்ச அபராதத்தை விதிக்குமாறு தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான ஏபாட்க்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறையின் மீதான நம்பிக்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த விபத்தில் 25 பயணிகள் காயமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும், பிரசரானா நிறுவனத்தின் உயர் நிர்வாகம் வழக்கம் போலச் செயல்படுவதை ஏற்க முடியாது என அமைச்சர் சாடினார்.
இன்று கோலாலம்பூர், சான் சோ லின் அருகே நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புக் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், தவறிழைத்த அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரசரானா நிர்வாக வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.













