நாட்டில் அதிகரித்து வரும் செயற்கை போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் செயற்கை போதைப்பொருளைக் கண்டறியும் புதிய கருவிகள் பயன்படுத்தவுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே தெரிவித்துள்ளது.
இந்த புதிய கருவிகளில், வேப் திரவங்களில் கலக்கப்படும், பெண்டானில் மற்றும் செயற்கை கஞ்சா கலவைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை பரிசோதிக்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பரிசோதனை கருவிகளானது, நாடு முழுவதும் உள்ள அமலாக்க அலுவலகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கருவிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் என்றும் ஏஏடிகே தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சோதனை நடவடிக்கைகளில், பெண்டானில் போன்ற செயற்கை போதைப்பொருட்களைக் கண்டறிவதில் அதிகாரிகள் புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக ருஸ்லின் ஜூசோ குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா மற்றும் ஹெராயின் போன்ற புழக்கத்தில் உள்ள போதைப் பொருட்களை விட, இந்த செயற்கை போதைப்பொருட்களானது மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, ருஸ்லின் ஜூசோ வெளியிட்ட தகவலில், மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பழக்கம் கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நாடு முழுவதும் பதிவாகியுள்ள போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களில் 70 விழுக்காட்டினர் செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவதையும் ருஸ்லின் ஜூசோ சுட்டிக் காட்டியுள்ளார்.








