மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான லங்காவியில், விடுமுறை காலத்தை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வரும் நிலையில், அங்கு படகு சவாரிக்கான விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த மே 21 முதல் வரும் ஜூன் 7 -ஆம் தேதி வரையில், படகுப் சவாரிகளுக்கான டிக்கெட் விற்பனையானது சுமார் 1 லட்சத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 5,556 பயணிகள் படகு சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
விசாக தினம், மலேசிய மாமன்னரின் பிறந்தநாள் என விடுமுறை நாட்களும், மாத இறுதியில் ஊதியம் பெறும் நாட்களும் ஒன்றாக வருவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கான்சார்டியம் ஃபெர்ரி லைன் வென்ச்சர்ஸ் எஸ்டிஎன் பிஹெச்டி நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் நூர்ஹாஃபிஸ் அப்துல் வாஹித் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளின் அதிகரிப்பை சமாளிக்கும் வகையில், லங்காவி - கோலா கெடா மற்றும் லங்காவி - கோலா பெர்லிஸ் ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக 53 படகு சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








