கிளந்தான் - தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அம்மாநில போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த மே 25-ஆம் தேதி, பட்டாணி பகுதியில், தாய்லாந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த தகவலை மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாமிய பெண்களைப் போல் உடையணிந்து, ஆயுதமேந்தி வந்த 4 பேர், பள்ளி ஒன்றின் வெளியே, தாய்லாந்து போலீஸ் அதிகாரியை நோக்கி சுட்டத்தில், அந்த அதிகாரியின் மனைவி உயிரிழந்தார்.
இது குறித்து கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகம்மது யுசோஃப் மாமத் கூறுகையில், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்தவொரு சம்பவத்தையும் தடுக்க, எல்லை நுழைவு வாயில்களில், 24 மணி நேர கண்காணிப்பும், ரோந்துப் பணிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம், எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








