சிலாங்கூர் மாநிலம், தஞ்சோங் செப்பாட் பகுதியில் உள்ள சுமார் 30 பன்றிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் 11 ஆயிரம் பன்றிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை குழுத் தலைவர் இஷாம் ஹாஷிம் வெளியிட்டுள்ள தகவலில், பன்றிகளை அகற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அங்கு வளர்க்கப்படும் பன்றிகள் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாததால், அவற்றை இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பவோ அல்லது அழிக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கம்பங் லாடாங் தும்போக் பகுதியில் செயல்பட்டு வந்த பன்றிப் பண்ணைகள் கடந்த ஜனவரி மாதம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், தஞ்சோங் செப்பாட் பகுதியில் உள்ள பன்றிப் பண்ணை உரிமங்களை புதுப்பிப்பதற்கு மாட்சிமை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா ஒப்புதல் வழங்க மறுத்த அடுத்து, அப்பண்ணைகளையும் மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








