கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதல் முனையத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஏற்பட்ட பயணப் பெட்டி கையாளும் முறை பாதிப்பு குறித்து, போக்குவரத்து அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சாந்திரன் முனியன் தலைமையில் இன்று அவசர ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
மின் அழுத்தக் குறைவு காரணமாக பயணப் பெட்டி கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததே இந்தப் பாதிப்பிற்கு மூலக்காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஆயிரத்து 61 பயணப் பெட்டிகள் விமானத்தில் ஏற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், விமானப் பயண அட்டவணையில் எந்த மாற்றமும் இன்றி விமானங்கள் வழக்கம் போல் இயங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணப் பெட்டிகள் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில், இந்தச் சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி அமைச்சரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
விமான நிலையத்தின் பயணப் பெட்டி கையாளும் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்கவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் மலேசிய விமான நிலையங்கள் கழகத்திற்கு போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது.















