கோலாலம்பூர், ஜூலை.14-
தமது 100 ஆவது பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடிய வேளையில், கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன்னில் சேர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர், அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி, இன்று தனது வழக்கமானப் பணிகளைத் தொடர்ந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் புத்ராஜெயாவில் பிக்னிக் & போட்லக் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதிக சோர்வுக்கு ஆளாகிய துன் மகாதீர், உடனடியாக ஐஜேஎன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் புத்ராஜெயாவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை கலந்து கொள்ளாமல் போனதற்கு துன் மகாதீர், ஏற்பாட்டாளர்கள் மற்றும் வருகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, உடன் இருந்த மருத்துவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். அதனால், நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சிறிது நேரமே இருந்தேன். பின்னர் வீடு திரும்பி விட்டேன் என்று இன்று திங்கட்கிழமை தமது முகநூல் பதிவில் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.








