மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் 23-வது ஆண்டுப் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத் தெரிவு இனிதே நடைபெற்றது. தலைவர் ரதா கிருஷ்ணன் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முடா (MUDA) கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் சிவபிரகாஷ் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்டார்.
2025/2026-ஆம் ஆண்டு தவணையில் சிறப்பாகச் செயலாற்றிய செயற்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்த டாக்டர் சிவபிரகாஷ், 2026/2027-ஆம் ஆண்டுக்கும் அதே தலைமைத்துவத்தை ஏகமனதாகத் தக்கவைத்துக் கொண்ட உறுப்பினர்களின் முடிவை வரவேற்றார். இது அக்குழுவின் மீதான நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் காட்டுகிறது என்றார்.
இந்நிகழ்வில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் புவனேஸ்வரன் பச்சமுத்து, இந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் தொண்டர்மணி கா. மூர்த்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
டாக்டர் சிவபிரகாஷ் உரையாற்றுகையில், "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" எனும் திருக்குறளை மேற்கோள் காட்டினார். கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல, அது ஒழுக்கம், பணிவு மற்றும் அறநெறிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய பண்புள்ள எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதில் மலேசிய இந்து சங்கம் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.













