மலாக்கா, மார்ச்.15-
மலாக்கா, ஆயர் கெரோவில் உள்ள ஜாலான் துன் அப்துல் ரஸாக் பகுதியில் சட்டவிரோதச் சாலைப் பந்தயங்களைத் தடுக்கும் நோக்கில், நள்ளிரவு முதல் அதிகாலை வரை போக்குவரத்துப் காவற்படை சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வாகனங்களை அனுமதியின்றி உருமாற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 319 அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு, 79 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மலாக்கா போக்குவரத்து குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹமட் ஸாக்கி ரமாட் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 18 முதல் 36 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சாலைப் போக்குவரத்துத் துறையினரும் பல்வேறு விதிமீறல்களுக்காக 200-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை வழங்கினர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டவிரோத சாலைப் பந்தயக்காரர்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என முஹமட் ஸாக்கி ரமாட் தெரிவித்துள்ளார்.








