கோலாலம்பூர், ஜூலை 05-
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் நடைமுறை, சீரான நிலையை எட்டுவதோடு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அது அடைவதை உறுதிபடுத்துவதில்தான் தற்போதைக்கு அரசாங்கத்தின் முழ் கவனமும் உள்ளது.
இருப்பினும், ரோன் 95 வகைப் பெட்ரோலுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக, பொருளாதார அமைச்சு நேற்று மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளது.
டீசல் மூலமாக தொடங்கப்பட்டுள்ள எரிபொருளுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கை, டீசலை கடத்தும் நடவடிக்கைகளையும் மக்களின் வாழ்க்கை செலவினங்கள் மீதான தாக்கத்தையும் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை உந்த செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, மிச்சப்படுத்தப்படும் 4 பில்லியன் ரிங்கிட் தொகை, பொது சேவைகளின் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, தேசிய முன்னணியின் BERA நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சபரி யாகோப், பெட்ரோலுக்கான உதவித்தொகை சீரமைப்பு நடவடிக்கையை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளும் என கேள்வியை எழுப்பியிருந்தார்.








