அரசாங்கத்தின் செலவினக் குறைப்பு நடவடிக்கைகள், புதிய ஆசிரியர்களை நியமிப்பது மற்றும் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுவது போன்ற கல்வி அமைச்சின் முக்கியத் திட்டங்களைப் பாதிக்காது என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் ஊட்டச்சத்திற்கு அவசியமான ஆர்.எம்.டி. போன்ற உணவுத் திட்டத்தின் பயனாளிகளையும் இந்த நடவடிக்கைகள் பாதிக்காது என்றும், பழுதடைந்த பள்ளிகளைப் பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் பள்ளிப் பராமரிப்புப் பணிகள் வழக்கம்போல் தொடரும் என்றும் ஃபத்லினா சிடெக் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் அல்லது பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவதிலோ அல்லது 6 வயதுடைய சிறுவர்களை முதலாம் ஆண்டிற்குள் அனுமதிப்பதிலோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் கூறினார்.
உலகளாவிய பொருளாதார அழுத்தம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, அடுத்த வரவுசெலவுத் திட்டம் கூடுதல் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் தயாரிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் குறிப்பிட்டிருந்ததை அடுத்து, அமைச்சர் ஃபட்லினா சீடேக் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.








