நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் இன்று காலை Istana- வில் சமஸ்தானபதி யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, காலை 11 மணியளவில் அவர் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேறினார்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி பெசார் அமினுடின் ஹரூண் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் மாநில அரசின் வாராந்திர கூட்டத்திற்கு முன்பாக வழக்கமாக நடத்தப்படும் ஒரு சாதாரண சந்திப்புதான் இது என்று விளக்கமளித்தார்.
எனினும், இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறவிருந்த மாநில அரசின் வாராந்திர ஆட்சிக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் கூட்டம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கலைப்பு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள வேளையில் இந்தத் திடீர் சந்திப்பும் கூட்ட ஒத்திவைப்பும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








