புத்ராஜெயா,ஆகஸ்ட் 30-
கோலாலம்பூர் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனைகளில் சட்டவிரோத ஏஜெண்டுகளை உள்ளடக்கிய கும்பல் ஒன்று வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத ஏஜெண்டுகளை உள்ளடக்கிய கும்பலை முறியடித்தது மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 530 கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவு இலாகாவின் துணை தலைமை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கை, கோலாம்பூரில்பந்தர் மெஞ்சலாரா, ஜாலான் மேடன் துவாங்கு, ஜாலான் தியோங் நாம் மற்றும் ஜாலான் சேரஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் 33 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த பல வகையான கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்தாக அவர் கூறினார்.
பிடிபட்டுள்ள 13 பேரில் 11 பேர் வங்காளதேசப் பிரஜைகள் ஆவர். ஒருவர் இந்தியப்பிரஜை என்றும் மற்றொருவர் உள்ளுரைச் சேர்ந்தவர் என்றும் ஜாஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.
சுற்றுலா வருகைக்கான அட்டை, தற்காலிக வேலை பெர்மிட் அட்டை, விசா மற்றும் அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்பில் பணிக்கு எடுத்தல் முதலிய சேவைகளை வழங்குவதாக கூறி, இந்த ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.








