கோத்தா பாரு, ஜூன்.14-
மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள சுங்கை கோலோக் ஆற்றில் நடக்கும் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, வழக்கமான படகு ரோந்துப் பணிகளை விட டிரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
ஆற்றின் குறுகலான தன்மையின் காரணமாக, போலீசார் பயணம் செய்யும் படகுகளின் இயந்திரச் சத்தத்தை எல்லையின் மறுபுறத்தில் இருப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்கின்றனர்.
இதனால், சட்ட அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே கடத்தல் கும்பல்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி விடுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்புச் சுவர் அல்லது வேலி முழுமையாக அமைக்கப்படும் வரை, அந்தப் பகுதியைக் கண்காணிப்பதற்கு டிரோன் தொழில்நுட்பமே சிறந்த மாற்று வழியாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
டிரோன்கள் மூலம் எல்லைப் பகுதிகளை மறைமுகமாகவும் விரைவாகவும் கண்காணிக்க முடிவதால், கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இது கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








