பந்திங், ஜூன்.14-
சிலாங்கூர் மாநிலம், பந்திங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகேயுள்ள மழைநீர் வடிகாலில், சுமார் 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து காலை 9.07 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
முதலை குறித்த தகவல் கிடைத்தவுடன் எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், முதலையைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முதலை எவ்வாறு அந்தப் பகுதியில் வந்தது என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








