ஜோகூர், கூலாய் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தை, பெண் ஒருவரை மடியில் அமர வைத்து ஓட்டிய விவகாரம் தொடர்பாக 36 வயது ஓட்டுநர் மலாக்கா, ஜாசின் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், ஓட்டுநரின் மடியில் இருந்த பெண் பேருந்தை இயக்குவதும், வாகனம் சாலையில் அலைமோதியதும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து 'ஸ்ரீ மாஜு' நிறுவனத்தைச் சேர்ந்த அந்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் லீ ராபர்ட், சம்பந்தப்பட்ட ஓட்டுநரும் அந்தப் பெண்ணும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ, பேருந்து ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலித்து வருகிறது.








