தலைமறைவாக இருக்கும் மலேசிய நிதியாளர் லோ டக் ஜோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பொது மன்னிப்பு கோர முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
இத்தகவலை இன்று புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு உரையாடல் (PSD V) 2026 நிகழ்வின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு, அதன் தொடர்புடைய நாடுகளுடன் மலேசிய போலீசார் நல்லுறவை தொடர்ந்து பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகச் செய்திகள் படி, அமெரிக்க நீதித்துறையான டி.ஓ.ஜே-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், லோ டக் ஜோ இவ்வாண்டின் தொடக்கத்தில், டிரம்பிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள 1எம்.டி.பி பணிக்குழு தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, ஜோ லோவுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்கு தாம் கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.








