தலைமறைவாகியுள்ள நிதியாளர் லோ தேக் ஜோ, ரகசிய சந்திப்புகளுக்காக, மலேசியாவிற்கு திரும்பியதாக கூறப்படும் தகவல்கள் குறித்து புக்கிட் அமான் விசாரணை நடத்தவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர்டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
“ஜோ லோ” என அறியப்படும் லோ தேக் ஜோ, மலேசியாவிற்கு திரும்பி, சில ரகசியக் கூட்டங்களில் கலந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல்கள் உண்மையா? இல்லையா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, அதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று இன்று சனிக்கிழமை நடைபெற்ற பெங்காமான் போலீஸ் ஆட்டிசம் மையத்தின் ஆட்டிசம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கிய நபராகக் கருதப்படும் ஜோ லோ, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பொது மன்னிப்புக் கோரி தாக்கல் செய்துள்ள மனு, மலேசியாவில் அரசியல் தலைவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜோ லோவிற்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என்று 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடைய சில முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








