நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சென்னா சட்டமன்றத் தொகுதியில் தமக்கு எதிராக யார் போட்டியிட்டாலும் கவலையில்லை என்று ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் டெய், சென்னா தொகுதியில் போட்டியிடப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ள நிலையில், போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
மலேசியாவின் ஜனநாயக நிர்வாக அமைப்பில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராகக் களம் இறங்கலாம் என்றும், தமக்கு எதிரான சவால்களைப் பற்றிக் கவலைப்படாமல், கடந்த மூன்று தவணைகளாகத் தம்மைத் தேர்ந்தெடுத்த சென்னா தொகுதி வாக்காளர்களுக்குச் சேவை செய்வதிலேயே தமது முழுக் கவனமும் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகப் போட்டியிட வேண்டுமானால், ஆல்பர்ட் தே முதலில் தனது அடையாள அட்டை முகவரியை இந்த மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அந்தோணி லோக் நாசூக்காகச் சுட்டிக்காட்டியுள்ளார்.








