ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸ் பகுதியில் குண்டர் கும்பலின் மோதலால் தங்களின் 22 வயது மகன் கொல்லப்பட்ட துயரம் மீண்டும் யாருக்கும் நிகழக் கூடாது எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீஸ் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மே 21-ஆம் தேதி உணவகம் ஒன்றின் முன்பாக ஆர். அருண்குமார் என்ற இளைஞர் ரகசியக் கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள 7 பேர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையிலும், தலைமறைவாக உள்ள எஞ்சிய சந்தேக நபர்களையும் போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவரின் தாயார் தேவி வலியுறுத்தியுள்ளார்.
பெக்கான் நானாஸ் வட்டாரத்தில் அச்சுறுத்தலாக விளங்கி வரும் சட்டவிரோத ரகசியக் கும்பல்களையும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் அவர்களின் நடவடிக்கைகளையும் போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இதில் தலையிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.








