தாபுங் ஹாஜி முறைகேடு தொடர்பாக அரச விசாரணை ஆணையமான ஆர்சிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாமன்னருக்கு விளக்கமளித்ததையடுத்து, உண்மையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பொறுப்பேற்கச் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில் தாபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்வதற்காக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு உதவும் வகையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல், அரச விசாரணை ஆணைய அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படும் வர்த்தக குற்றச்சாட்டுகள் தொடர்பாக புக்கிட் அமான் போலீசார் தனியாக 5 விசாரணை ஆவணங்களைத் திறந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.








