கோலாலம்பூர், பிப்ரவரி.23-
பதிவு மற்றும் நில விவகாரங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்து ஆலயங்களுக்கு உதவும் வகையில், அவற்றின் சட்டப்பூர்வ நிலையின் அடிப்படையில் 'நான்கு வண்ண வகைப்பாட்டு' முறையைத் தேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மலேசிய இந்து சங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், இக்குழுவின் நோக்கம் "ஆலயங்களை தன்னிச்சையாகப் பதிவு செய்வது அல்ல, மாறாக அவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கான சரியான வழியைக் கண்டறிய உதவுவதே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை நிறம் என்பது முழுமையான மற்றும் முறையான ஆவணங்களைக் கொண்ட ஆலயங்களாகும். இதில் அரசாங்க Gazette அங்கீகாரம், நில உரிமை அல்லது முறையான அனுமதி பெற்ற முழுமையாக முறைப்படுத்தப்பட்ட ஆலயங்கள் அடங்கும்.
மஞ்சள் நிறம் என்பது தனியார் நிலத்திலோ அல்லது முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திலோ அமைந்துள்ள ஆலயங்கள். ஆனால், அவை இன்னும் முறையான Gazette அங்கீகாரம் அல்லது நிலப் பத்திர ஆவணங்களைப் பெறவில்லை.
ஆரஞ்சு நிறம் என்பது அரசாங்க நிலம், அரசு முகமைகளுக்குச் சொந்தமான நிலம் அல்லது தோட்டப்புற நிலங்களில் அமைந்துள்ள ஆலயங்கள். இவற்றுக்கு நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் அல்லது அனுமதி உள்ளது.
இத்தகைய ஆரஞ்சு பிரிவில் உள்ள ஆலயங்கள் நிலத்தை விலைக்கு வாங்கவோ அல்லது அரசாங்கத்திடமிருந்து நிலத்தைப் பெறவோ இக்குழு உதவும் என்று தேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








