மலேசிய குடிநுழைவுத் துறையான JIM, இன்று மே 4-ஆம் தேதி, ELITE நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கி அமைந்துள்ள டெங்கிள், R&R ஓய்வு மற்றும் உணவகப் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு, சட்டபூர்வ அனுமதியின்றி வேலை செய்த வெளிநாட்டு தொழிலாளர்களைக் கண்டறிந்துள்ளது.
பொதுமக்கள் அளித்த புகார் மற்றும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ரகசிய விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், குடிநுழைவு அமலாக்கப் பிரிவு மற்றும் தேசிய பதிவுத்துறை அதிகாரிகள் உட்பட 30 அதிகாரிகள் பங்கேற்றனர்.
இச்சோதனை நடவடிக்கையில் மொத்தம் 39 பேர் விசாரணை செய்யப்பட்டதில், 27 வெளிநாட்டவர்களும், 12 உள்ளூர்வாசிகளும் அடங்குவர்.
விசாரணையில், சில முதலாளிகள் வேறு நிறுவனங்களுக்கான வேலை அனுமதி ஆவணங்களை பயன்படுத்தியும் மற்றும் சுற்றுலா விசாக்களை தவறாகப் பயன்படுத்தியும், வெளிநாட்டவர்களை R&R வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணியமர்த்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 20 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.








