வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், எதிர்க்கட்சியான பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி, மாநில சட்டமன்றத்தின் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஜோகூர் பெர்சாத்து தலைவர் சஹ்ருதீன் ஜமால் வெளியிட்டுள்ள தகவலில், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாநிலத் தேர்தலை எந்நேரமும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலானது இறுதி ஒப்புதலுக்காக கூட்டணியின் மத்திய தலைமையிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் இன்று கோத்தா இசுகந்தர்-இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் அவருடன், மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியான முடா தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அஜிஸ் கலந்து கொண்டார்.
மாநிலத் தேர்தல்களில் பெரிக்காத்தான் உடனான முடாவின் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அம்முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமிரா ஆயிஷா தெரிவித்துள்ளார்.








