பொதுமக்களிடையே அச்சம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், சர்ச்சைக்குரிய சமய போதகர் சம்ரி வினோத் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராகினார்.
41 வயதுடைய அவர், நீதிபதி ஃபைசா நூர் ஹசன் முன்னிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, சட்டவிரோத ஆலயங்களுக்கு எதிரான பேரணி குறித்து, பொதுமக்களிடையே அச்சம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் முகநூலில் கருத்துகளைப் பதிவு செய்ததாக சம்ரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, குற்றவியல் சட்டம், பிரிவு 505(பி) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
கடந்த வாரம் மலேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், சம்ரி வினோத் மற்றும் சூலத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தமீம் தஹ்ரி ஆகியோர் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








