பட்டர்வொர்த், பிப்ரவரி.26-
பினாங்கு, பட்டர்வொர்த் பகுதியில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தாமான் பகான் உணவகத் தளம் 2.7 மில்லியன் ரிங்கிட் செலவில் அதிநவீன வசதிகளுடன் உருமாறுகிறது.

பாகான் டாலாம் தொகுதியில் அமைந்துள்ள தாமான் பாகான் உணவகக் கடைத் தளத்தை, 27 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இப்பகுதியில் உள்ள வணிகர்கள் முறையான வசதிகளின்றி தற்காலிகக் கூடாரங்களின் கீழ் வியாபாரம் செய்து வந்ததை ஆய்வின் மூலம் கண்டறிந்த குமரன் கிருஷ்ணன், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

செபராங் பிறை மாநகர் மன்றத்தின் 2 மில்லியன் ரிங்கிட் கூடுதல் மானியத்துடன், கடந்த 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி இதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நவீன உணவகத் தளம் வெறும் கட்டடமாக மட்டுமன்றி, முறையான கழிவுநீர் வடிகால் வசதி, மின்சாரக் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கான விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்படவுள்ளது. சுமார் 18 மாத காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்படவுள்ள இத்திட்டம், வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அப்பகுதி வணிகர்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலில் தங்களின் வணிகத்தை மேற்கொள்ள முடியும் எனத் குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.








