கோலாலம்பூர், நவம்பர்.11-
மர்மமான முறையில் காணாமல் போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மற்றும் சமூக ஆர்வலர் அமீர் சே மாட் ஆகியோருக்கு அரசாங்கமும், போலீஸ் துறையும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று செபூத்தே எம்.பி. தெரேசா கோக் இன்று அமைச்சரவையைக் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் அவ்விருவரும் காணாமல் போனது தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப போலீசார் மீண்டும் விசாரணை அறிக்கையைத் திறப்பர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக தெரேசா கோக் குறிப்பிட்டார்.
எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்பது விசாரணை அறிக்கையை மீண்டும் திறக்கும் நடவடிக்கைக்கு முரணானது என்று தெரேசா கோக் தெரிவித்தார்.
இவ்விருவரும் காணாமல் போனதற்கு அரசாங்கமும் போலீஸ் துறையும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்பது நீதிமன்றம் கண்டறிந்த உண்மைகளுக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுவது போல் ஆகிவிடும். போலீஸ் துறை செய்தது சரி என்றும், நீதிபதி கண்டறிந்தது தவறு என்றும் பொருள்படும் என்று தெரேசா கோக் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதிரியார் ரேய்மண்ட் கோ குடும்பத்திற்கு 37 மில்லியன் ரிங்கிட்டையும், சமூக ஆர்வலர் அமீர் சே மாட் குடும்பத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட்டையும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கும், போலீஸ் துறைக்கும் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.








