சீனாவின் 8 முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மலேசியாவில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது தெரிவித்துள்ளார். மலேசிய மருத்துவ மன்றத்தில் புதிய மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற சிறப்பு அறைக் கூட்டத்தில் பேசிய அவர், இதில் ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியும் அடங்கும் என்றார். மேலும், நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க, மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி நியமனக் காத்திருப்பு காலம் 10 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிரந்தரப் பணி நியமனம் பெறும் அதிகாரிகள் தங்களின் இடமாற்றச் செலவினங்களை அரசாங்கத்திடம் கோருவதற்கான புதிய சலுகைகள் ஜூன் 22 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை பணியாளர்களின் விநியோகத்தை முறைப்படுத்த ஏதுவாக, பொதுச்சேவை துறை முழு சுயாட்சி அதிகாரத்தை அமைச்சிற்கு வழங்கியுள்ளது என்பதையும் டாக்டர் சுல்கிப்ளி அகமது விளக்கினார்.








