கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோவை அவதூறாகப் பேசியதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் ஐ.ஜி.பி மூசா ஹசான் தாக்கல் செய்த அப்பீல் மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள் ரஜாரியா புஜாங், செ ருசிமா கசாலி மற்றும் அஸ்மி அரிஃபின் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்த அப்பீல் வழக்கில், மூசா ஹசான் முன்வைத்த ஒன்பது சட்டக் கேள்விகளும் கூட்டரசு நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய முக்கிய சட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இல்லை என்பதால், இந்த அப்பீல் மனுவிற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஹன்னா யோவுக்கு எதிராக மூசா ஹசான் அவதூறு செய்ததாக உறுதிசெய்யப்பட்ட முந்தைய நீதிமன்றத் தீர்ப்பு தொடர்ந்து அமலில் நீடிக்கிறது.
அதன் படி, ஹன்னா யோவுக்கு 2 லட்சத்து 50,000 ரிங்கிட் இழப்பீட்டோடு, 50 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவையும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் ரிங்கிட்டை மூசா ஹசான் செலுத்த வேண்டும்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, ஹன்னா யோ, மலேசியாவை "கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்கிறார்" என்று மூசா ஹசன் பொதுவெளியில் வெளியிட்ட கருத்திற்காக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.








